தமிழர் இசைக்கருவிகள் இசை ஆய்வாளர்களின் கருத்துப்படி இசைக்கு ஐந்து கருவிகளால் உரிய ஓசைகள் உண்டாகின்றன. அக்கருவிகள் தோல்கருவிகள், துளைக்கருவி, நரம்புகருவி, கஞ்சக்கருவி, மிடறு என்பனவாகும் |
தோற்கருவிகள் மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்டவை. அவையாவன : பெரும்பறை, சிறுபறை, பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமடூகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வலையம், மொந்தை, முரசு, நிதாளம், கண்விடுதூம்பு, துடுமை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், துடி, நாளிகைப்பறை. மத்தளம் இதற்குத் தண்ணுமை என்றும், மிருதங்கம் என்றும் பெயர்கள் உள்ளன. மத்து என்பது ஓசைப்பெயர். தளம் என்பது இசையிடனாகிய கருவிகளுக்கெல்லாம் தளமாக இருப்பது. ஆதலால் மத்தளம் என்று பெயர் பெற்றது. குடமுழா தோற்கருவிகளில் ஒன்றாகக் கூறப்படும் குடமுழா என்பது ஐந்துமுக வாத்தியம் என்று இப்போது கூறப்படுகிறது.இது இப்போது இசைப்பாட்டில் வாசிக்கப்படாமல் மறைந்து விட்டது. தவுல் இது நாதசுரத்துடன் வாசிக்கப்படுகிற தோற்கருவி. இதனை மத்தளம் என்றும் கூறுவர். ஆதியில் இதன் பெயர் மட்டூகம் ஆகும். பதலை இது தோற்கருவி இன்றைக்கு தபலா என திரிந்து வழங்குகிறது. சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டு பிற்காலத்தில் மறைந்துவிட்டது. ஆனால் வடநாட்டில் தபலாவாக புகழ்சூடி இன்றும் இருக்கிறது.
|